0
தமிழ் மக்கள் மீள் குடியேறும் போது பாரபட்சம் காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானாகவே பிரதேச செயலகம் சென்று மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரையில் நடைபெற்ற நிகழ்வில் நேற்று(05.11.2016) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வாகரைப் பிரதேசத்திலிருந்து கடந்த கால யுத்த சூழலின் போது இடம்பெயர்ந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் அவர்களை மீளக் குடியேற்றுவதில் எந்த தடையும் இல்லை. தமிழ் மக்கள் மீள் குடியேறும் போது பாரபட்சம் காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானாகவே பிரதேச செயலகம் சென்று மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார்.

மீள் குடியேற்றப்படவுள்ளவர்களின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நாங்கள் கோரிக்கை முன்வைத்தால் எனது பெயரைக் குறிப்பிட்டு மீள் குடியேற்றத்தை தடுப்பதாக கூறுகிறார். அமைச்சர் தனது பதவியை சரியான முறையில் கையாள வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா எந்த அரசாங்கத்தை எதிர்த்தாரோ அந்த அரசாங்கம் போட்ட பிச்சையில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி, அபிவிருத்திக் குழுத் தலைமை ஆகிய பதவிகளைப் பெற்று இருக்கிறார். ஆனால் நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்பதை அவர் மறந்துவிட கூடாது என்றார்.

Post a Comment

 
Top