0
வெள்ள அனர்த்தத்தால் உயிரிழந்த பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு சபையில் தமது அனுதாபத்தைத் தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீண்டும் மீண்டெழ இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டது.

தமிழக மக்களுக்கு உதவி செய்வதற்காக வடக்கு மாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு ஆதரவு வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

 நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு அனுதாபம் தெரிவித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,
எமது இனப்படுகொலைக்கு எதிராக தமிழ் மக்கள் படும் துன்பம், துயரங்கள், அல்லல்களை முள்ளிவாய்க்கால் வரை தமது குரலைக் கொடுத்து ஐ.நாவில் எமக்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு டில்லிக்கு அழுத்தம் கொடுத்த எமது தமிழக மக்கள் இன்று மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
அவர்கள் மீண்டும் மீண்டெழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் எமது அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழக மக்களுக்கு உதவி செய்வதற்காக வடக்கு மாகாண சபையால் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவிசெய்ய இந்த நிதியத்துக்கு ஆதரவு வழங்க அனைவரும் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.


Post a Comment

 
Top