0
ஜனநாயகத்திற்கும் மற்றும் அடிப்படை உரிமைகளுக்குமான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபகரணங்கள் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளுக்கு விளக்கமளிக்கும் இரு நாட்கள் கொண்ட செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது.

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கே. நாராயணபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தன்னுரிமைகளுக்கான சட்ட நிவாரணங்கள் பற்றி நடாத்தப்பட்ட செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாரை, கல்முனை மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் பங்கேற்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அக்டட் மற்றும் சொண்ட் ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்  சனிக்கிழமை (03) குறித்த ஹோட்டலில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மனித உரிமைகள் மற்றும் சட்ட மதிப்பு ஆகியவற்றில் சட்டத்தரணிகளின் பங்களிப்பு பற்றி ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டீ அல்விஸ் மற்றும் தேசிய பொறிமுறை (அடிப்படை உரிமைகள் மற்றும் ஆணைகள்) சட்ட மீளாக்கம் பற்றி சட்ட மதிப்பு சபையின் ஒன்றுசேர்ப்பாளர் பிரியந்த கமஹே ஆகியோர் விளக்கமளித்தனர்.

 நேற்றைய (04) நிகழ்வில் சர்வதேச சட்ட அபிவிருத்தி, சரித்திர மீளாய்வு, உரிமைகள் சாசனம் மேற்பார்வை, சர்வதேச மனித உரிமைகளின் முக்கிய பாகங்கள் பற்றி சட்டத்தரணி அனுரா மெட்டிக்கொட மற்றும் அடிப்படை உரிமை, சுதந்திரத்திற்கான தடைகள், அரசியல் அமைப்பின் சட்டபூர்வம், அவசரகால நிலையிலும் மற்றும் சமாதானகால நிலையிலும் உரிமைகள் பற்றி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் விளக்கமளித்தனர்.



Post a Comment

 
Top