0
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கினை திறந்து வைக்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பின் இதயம் எனத் தெரிவிக்கப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 202 வது ஆண்டு நிறைவையொட்டி புத்தகத்தினை வெளியீட்டு வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்றது, இதில் வழங்கப்பட்ட அத்தனை சாரம்சங்களிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமைக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நூற்றுக்கு நூறு வீதமான தமிழ் மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பாடசாலையில் அதிபர் கூட தமிழை புறக்கணித்து விட்டார். இன்று அனைத்து இடங்களிலும் மும்மொழி பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்ற வேளையிலும் நமது பகுதிகளில் நாம் அதனை புறக்கணித்து வருவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நாட்டின் ஜனாதிபதி உரையாற்றும் போது கூட தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யபடுகின்றதோடு வணக்கம் என்றுதான் முதலில் அவர் தனது உரையை ஆரம்பித்தார். அப்படி இருக்கும் போது அவர் முன்னிலையில் இவர்கள் எப்படி எமது தாய் மொழியினை புறக்கணிக்க முடியும். இந்த நிகழ்சி ஒழுங்குகளை வலயத்தின் பணிப்பாளர் கூட அறிந்திருக்கவில்லையா இதற்கு அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்.
எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தால் அவருக்கு எங்கள் கிண்ணத்தில் தான் உபசரிப்பு செய்ய வேண்டும் மாறாக அடுத்தவர் கிண்ணத்தில் உபசரிப்பு செய்யக்கூடாது. இந்த நிகழ்சியினை பார்த்து விட்டு முதலமைச்சர் என்னிடம் கவலை தெரிவித்து பேசினார்.
மாகாண சபைக்கு உட்பட்ட மாகாண சபையிலிருந்து நிதியினை பெறுகின்ற பாடசாலையும் கூட பாடசாலையின் அபிவிருத்தியினை நோக்காக கொண்டு தமிழை புறக்கணிக்க கூடாது இன்று தேசிய கீதம் தமிழில் பாட வேண்டும் என்று எத்தனையோ போராட்டங்களை நடாத்தி அதனை இன்று நமது பகுதிகளில் தமிழில் பாடுகின்ற அளவுக்கு கொண்டு வந்திருக்கின்றோம் ஆனால் அதனைக்கூட தனி இசையிலே போய் முடிந்தது இப்படியாக இந்த நிகழ்வில் ஒட்டு மொத்தமாக தமிழை புறக்கணித்தமைக்கு எனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top