தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து
சரியான தீர்மானத்தை எடுப்பார்களாயின் அது நல்லாட்சிக்கு நல்ல சகுணமாக
அமையுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயமானது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படையாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்புச் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்
கைதிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
32 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 30
பேர் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 116
கைதிகள் புனர்வாழ்வின் பின்னர் விடுதலையாவதற்கு சம்மதம் தெரிவித்து
கையொப்பங்களை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதத்தின் மூலம் தங்களது விடுதலையை வலியுறுத்தும் கைதிகளின்
போராட்டம் நியாயமாக பார்க்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment