0
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வந்தாறுமூலை  கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மாணவர்கள்  பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'பேனா தூக்கும் கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு வைக்கவேண்டாம்' என்ற கோஷத்துடன் குறித்த நிறுவகத்துக்கு முன்பாக மாணவர்கள் ஒன்றுதிரண்டனர்.

இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'யாழ்ப்பாணத்தில்; சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் கொலை தொடர்பில் நீதியான முறையில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கடந்த யுத்தம் காரணமாக பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம்வரை செல்லும் தமிழ் மாணவர்கள் மீது இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கடந்த காலத்தில் திருகோணமலையில் 05 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட தமிழ் மாணவர்கள் கடத்தல், காணாமல் போதல் சம்பவங்கள் என்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில்   பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இதுவரையில் இவற்றுக்கான நீதி கிடைக்காத நிலையிலேயே, தற்போது மேற்படி இரு மாணவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்' என்றனர்.

இதேவேளை, மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.  











Post a Comment

 
Top