“இன்றைய இளைஞர்கள் எங்களது அழிந்து போன கலை, கலாசாரங்களை கட்டியெழுப்புவதுடன் எமது நாளைய சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வேலைகளை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்" என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் கூறியுள்ளார்.
பாண்டியூர் திரௌபதியம்மன் ஆலயத்திலே ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இந்து இளைஞர் மன்றத்தினரின் அனுசரனையுடன் ஸ்ரீ திரௌபதியம்மன் புகழ்பாடும் புதிய பாடல்கள் கொண்ட பாண்டியூர் பாஞ்சாலி எனும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வினை நேற்று இரவு குறித்த அமைப்பின் தலைவர் தலைமையில் நடத்தியிருந்தார்கள்.
இங்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் உரையாற்றுகையில். இந்த ஆலயத்திலே நடைபெறும் இரண்டாவது இறுவட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றேன்.
இந்த இறுவட்டினை வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியினை இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களினதும், மாணவர்களதும் கல்வி,கலை, கலாசார மேம்பாட்டிற்கு பயன்படுத்துவதென்பது மிகவும் போற்றத்தக்க விடயமாகும்.
அவ்வாறு எமது அடுத்த சந்ததியினரை வளர்க்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இன்றுள்ள இளைஞர்கள் அழிந்து போன கலை, கலாசாரங்களை கட்டியெழுப்புவது மாத்திரமல்ல எங்களது சமூகத்தில் இருக்கின்ற அடிப்படை பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கமுடியும் என்பது பற்றி சிந்திப்பதன் மூலம் தான் எமது அடுத்த சந்ததியினரை கட்டிக்காக்கமுடியும்.
எமது இந்து ஆலயங்களை பொறுத்தவரையில் சமூகங்களையும், மனிதர்களையும் நல்வழிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டது. இருந்தும் அவ்வாறு ஆலயங்கள் செய்யவேண்டிய பணிகளை இன்று இந்த அமைப்புக்கள் முன்னெடுத்து வருவது மிகவும்போற்றக்கூடியதொன்றாகும்.
இவ்வாறு ஏனைய பிரதேசங்களில் இருக்கும் இளைஞர்களும் இவ்வாறான சமூகம் போற்றத்தக்க பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, உணவு போசாக்கு அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், மற்றும் முன்னால் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், இந்து இளைஞர் மன்றங்களின் உறுப்பினர்கள், ஆலயங்களின், நிருவாகத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment