மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதும் பழமை வாய்ந்ததுமான புணாணை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் பழைய ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைகள் தொடர்பாக பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகள் நேற்று(22.10.2016) விஜயம் மேற்கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோரே மேற்படி ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைகளை பார்வையிடுவதற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளையின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் மூன்று இலட்சம் ரூபாய் நிதியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்டிட பணிகள் தொடர்பாக பார்வையிடப்பட்டது.
அத்தோடு பழைய ஆலயம் 1960ம் ஆண்டு காலப் பகுதியில் அமைக்கப்பட்டமையால் இவ்வாலயத்தை உடைக்காது புனரமைப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சென்று அதனை உடனடியாக புனரமைப்பு செய்து விநாயகர் சிலையை வைப்பதற்கு நடவடிக்கை மேறகொண்டுள்ளார்.
இவ்வாலயமானது சுமார் 60 வருட காலம் பழமை வாய்ந்தது. யுத்த சூழ்நிலை காரணமாக சேதமடைந்து கவனிப்பாரற்று காணப்பட்டது. இவ்வாலயத்தின் விக்கிரகங்கள் சில விஷமிகளினால் களவாடப்பட்டும் சேதமாக்கப்பட்டும் தூக்கி வீசப்பட்டும் காணப்பட்டது. அத்துடன் இவ்வாலயத்தின் காணிகள் கூட அபகரிக்கப்பட்டு காணப்படுவதுடன் காணி எல்லைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்தனர்.
கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இவ்வாலயமானது அவ்வீதியால் செல்லும் அடியார்கள் சுவாமியினை வணங்கி செல்லுவதற்கு துணையாய் இருந்து வருகிறது.
மேற்படி ஆலயத்தினை சிலர் சேதப்படுத்தும் முயற்சியினை கடந்த காலத்தில் மேற்கொண்ட வேளை அயலில் இருந்த பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தவர்கள் ஆலயத்தினை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததுடன் வழிபாடுகள் செய்தும் வந்துள்ளனர். இதற்காக பாரிய சிரமதானப் பணிகளை மேற்கொண்டும் வந்துள்ளனர்.
இதே வேளை அக்காலப் பகுதியில் குடியிருந்த அப்பகுதி தமிழ் குடும்பங்கள் சில யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறியதினால் ஆலயத்தினை பாராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவ்விடம் முஸ்லிம்களின் பிரதேசமாக மாற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாலயம் நிர்மாணிக்கப்படுவதனால் புணாணை, சாலம்பன்சேனை, ஓமடியாமடு, வடமூனை, ஊத்துச்சேனை, ஆலம்குளம், வாகனேரி மற்றும் கொழும்பு வீதியால் செல்லும் பொது மக்கள் என பலரும் ஆலய தரிசனம் பெறுவார்கள். இதனால் அவசரமாக இதனை புனரமைப்பு செய்து விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
Post a Comment