இருபதுக்கு 20 உலக கிண்ணத் கிரிக்கெட் போட்டியின் முடிவின் அடிப்படையில் அணிகளின் தர வரிசைப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கை அணி 105 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறது. உலகக் கிண்ணத்தில் அரை இறுதியில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி (126 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது.
உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் (125 புள்ளி கள்) 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. நியூஸிலாந்து அணி (120 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
முறையே இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் இருக்கின்றன.
துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் துணைத் தலைவர் விராட் கோஹ்லி (889 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.
அவுஸ்திரேலியாவின் பிஞ்ச் (803 புள்ளிகள்), நியூஸிலாந்தின் குப்தில் (754 புள்ளிகள்), இங்கிலாந்தின் ஜோ ரூட் (750 புள்ளிகள்), தென்னாபிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் (741 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர் சாமுவேல் பத்ரீ (790 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். தென்னாபிரிக்காவின் தாஹீர், இந்தியாவின் அஷ்வின் 2ஆம் 3ஆம் இடங்களில் உள்ளனர்.


Post a Comment